திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில்.
நவகைலாய ஸ்தலங்களில் ஆறாவது தலமான திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில்.
சுவாமி: கைலாசநாதர்.
அம்மை: சிவகாமி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: இலுப்பை மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி.
தல வரலாறு :
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் திருவைகுண்டம் ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும்.
திருவைகுண்டம் பெயர் காரணம்:
நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் இதே ஊரில் அமையப்பெற்றுள்ளது. வைகுண்டத்தில் உறையும் மகாவிஷ்ணுவே இங்கு வைகுண்டநாத பெருமாளாகக் காட்சிதருவதால் இந்தத் தலம் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைப் பெறுகிறது. அதனால் திருவைகுண்டம் என்ற பெயரை இந்தத் தலம் பெற்றது.
திருவைகுண்டம் தலத்தின் சிறப்பு:
இங்கு நவதிருப்பதி தலங்களுள் ஒன்றான வைகுண்டநாதர் திருக்கோவிலும், நவகைலாய தலங்களுள் ஒன்றான கைலாசநாதர் திருக்கோவிலும் ஒரே ஊரில் அமையப்பெற்றுள்ளது.
சுவாமி கைலாசநாதர்:
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவர் நவகைலாய தலங்களிலேயே சற்றே பெரிய திருமேனி என்று கூறப்படுகிறது. இவருக்கு விஷேச காலங்களில் கவசம் மற்றும் நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- CHINNA VAAIKAL - 17min(7.4km)
- South beach - 17min(7.6km)
- Kongarayakurichi Soilplanes - 16min(6.5km)
- Thiruvarangapatti kammai - 23min(10.3km)
சிவகாமியம்மை:
தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் சிவகாமி அம்மை தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சித்தருகிறாள். அவளின் திருமுகத்தில் கோடி சூரிய பிரகாசமும், அவளுடைய புன்னகையில் மூன்றாம் பிறை நிலவும் ஒளிர்வதை காணலாம்.
பூதநாதர் சிறப்பு:
இந்தக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பூதநாதருக்கு வடைமாலை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சித்திரை மாதம் நடைபெறும் இந்தக் கோவிலின் திருவிழாவில் பூதநாதருக்கே முதல் மரியாதை செய்யப்படும். இந்த விழாவின் மூன்றாம் நாள் அன்று சுவாமி கைலாசநாதர், பூத நாதர் வாகனத்தில் எழுந்தருளிச் சேவை சாதிப்பார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால், செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்படி அங்கிருந்து ஆற்றில் அடித்துக் கொண்டுவரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலிபூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.
திருக்கோவில் அமைப்பு:
திருவைகுண்டம் நகரின் வடகிழக்கு திசையில் அமையப்பெற்றுள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இங்கு வானளாவிய கோபுரத்திற்கு பதிலாக மொட்டைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம், வேம்பு, தென்னை, வன்னி போன்ற மரங்களும், அரளி, நந்தியாவட்டை, திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. உள்ளே கிழக்கு நோக்கிய கருவறையில் கைலாசநாதர் கம்பீரமாக லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். அவரின் கருவறைக்குள் சரவிளக்கு தீபங்கள் சுடர்விட்டு கொண்டிருக்கும். வெளியே தனி கருவறையில் சிவகாமி அம்மை நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி, சூரியன், நால்வர், சுரதேவர், சப்தமாதர்கள், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, பஞ்ச லிங்கங்கள், வள்ளி - தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி, துர்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சந்திரன், பைரவர், பூதநாதர், சிவகாமி அம்மை உடனுறை சபாபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
திருக்கோவில் சிறப்புக்கள்:
- சந்தன சபாபதி மண்டபத்தில் கருணை பொழியும் வகையில் கண்ணைக் கவரும் பல சிற்பங்கள் உள்ளன.
- கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் நவ கைலாயங்களைப் பற்றிய செய்திகளும், படங்களும் மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
- இங்கு யானை மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் வாய்க்குள் உருளும் வகையில் உருளை வடிவிலான கல் பந்து ஒன்று உள்ளது. இந்தப் பந்தை நம் கைகளால் உருட்ட முடியும், ஆனால் அதன் வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது. இது பண்டைய காலத்து சிற்பக்க கலைஞர்களின் புத்திக்கூர்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
- நந்தவனத்திற்கு செல்லும் முன் மண்டபத்தில் ஒரு தூணில் உரோமச முனிவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள்:
சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி மாதம் சிவராத்திரி போன்ற வருடாந்திர விழாக்களும், பிரதோஷம், பௌர்ணமி பூஜை போன்ற மாதாந்திர வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 23 கி. மீ தொலைவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது திருவைகுண்டம். இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஆகியவை அடிக்கடி உள்ளன.