நெல்லை அருகில் உள்ளது சங்கரநயினார் கோவில் என்று அழைக்கப்படும் சங்கரன்கோவில். சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த திருக்கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு அரியும், அரனும் ஒன்றே என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சித் தருகிறார்கள்.
முற்காலத்தில் உமையம்மை கோமதி என்ற பெயரில் புன்னை வனமாக இருந்த இந்த பகுதியில் தோன்றி தவம் இருக்க, அவளுக்கு சுவாமியும், பெருமாளும் இணைந்து சங்கரநாராயணராக காட்சியளித்ததாக வரலாறு கூறப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு இங்கு சங்கரநாராயணர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. இங்கு சங்கரநாராயணர், சிவனுக்குரிய வலது பக்கத்தில் தலையில் கங்கை - பிறை சந்திரன் - சடைமுடி, கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆகியவற்றுடனும், மகாவிஷ்ணுவுக்குரிய இடது பக்கத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள், பட்டு பீதாம்பரம் ஆகியவற்றுடனும் ஒரு சேர இணைந்து காட்சி தருவது சிறப்பம்சம் ஆகும்.