Logo of Tirunelveli Today
English

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

வாசிப்பு நேரம்: 6 mins
No Comments
Front board of koonthankulam bird sanctuary.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இடங்களுள் ஒன்று கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இது திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி என்னும் ஊரின் அருகில் சுமார் 38 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இது 1.29 சதுர கி.மீ அளவுள்ள ஒரு சிறிய பறவைகள் ஆளும் சரணாலயம் ஆகும். இந்தச் சரணாலயத்தில் காம்ப் வாத்து, பார்-தலை கூஸ் மற்றும் ஹாரியர்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகள் வருடந்தோறும் வந்து தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. வெளிநாட்டு வாழ் பறவைகளைக் கண்டு மகிழும் ஒரு சிறந்த இடமாக வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அடுத்தபடியாக விளங்குகிறது. வேடந்தாங்கலைப் போலவே, இந்தப் பறவைகள் சரணாலயமும் நம்மை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பறவைகளால் ஆச்சரியப்படுத்துகிறது. கூந்தன்குளத்தில், பறவைகள் சரணாலயம் மட்டுமல்லாமல், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் ஏராளமான ஏரிகளும் உள்ளன. இது அரை வறண்ட பகுதி என்பதால், இந்த நிலப்பரப்பு வானிலைக்கு ஏற்ப அழகாக மாறுகிறது. ஈரமான பருவத்தில், அனைத்து ஏரிகளும் நிரம்பியிருக்கும் மற்றும் இங்குள்ள மைதானம் முழுவதும் தனித்துவமான காட்டுப்பூக்கள் நிறைந்து கம்பளம் விரித்தார் போலக் காணப்படும். இங்கு வறண்ட காலங்களில், புல்வெளி ராப்டர்களையும், காடைகள், பிராங்கோலின்ஸ் போன்ற தரைவாழ் பறவைகளையும் கண்டு மகிழலாம்.

இந்தக் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என்பது 1994 ஆம் ஆண்டில் 1.2933 கிமீ சுற்றளவை உள்ளடக்கிப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் நீர் பறவைகளை வளர்ப்பதற்கான சிறந்த இடமாக விளங்குகிறது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என்று சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட இது விரைவில் நம் நாட்டில் உள்ள பிரபலமான நீர் பறவைகள் சரணாலயங்களின் பட்டியலில் சேர்க்கப்படலாம். இந்தக் கிராமம் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்டது. இங்குப் புலம்பெயர்ந்த பறவைகள் டிசம்பர் மாதத்தில் பறந்து வந்து ஜூன் அல்லது ஜூலை மாதம்வரை வாழ்கின்றன. சுமார் 35 வகையான பறவைகள் இந்த அமைதியான கிராமத்திற்கு இனப்பெருக்கம் செய்ய வருகின்றன. இந்த ஊர் மக்களும் இங்கு வரும் பறவைகளிடம் தனி பாசம் காட்டி வரவேற்கிறார்கள். ஐந்து தலைமுறைகளாக உள்ளூர் வீடுகளின் கொல்லைப் புறங்களில் வந்து தஞ்சமடையும் இந்தப் பறவைகளை இந்தக் கிராம மக்கள் அன்போடு பராமரித்து வருகிறார்கள். சில நேரங்களில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக மழைக்காலங்களில், பல வர்ண நாரைகள் பறந்து வந்து கிராமங்களில் உள்ள வீடுகளின் கூரைகளில் கூடுகட்டி வாழ்கின்றன. இதனால் சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் பறவைகள் தங்கள் வீடுகளில் கூடு கட்டுவது குறித்து கிராமவாசிகள் மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். இங்கு வந்து வாழும் பறவைகளின் பாதுகாப்பை கருதி இங்கு வாழும் கிராமவாசிகள் தீபாவளி பண்டிகைக்குக் கூட வெடிகளை வெடிப்பதில்லை. அந்த அளவுக்குத் தங்கள் ஊரில் வரும் பறவை விருந்தாளிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து கொள்கின்றனர். மேலும் இங்குப் பறவைகள் வந்து தங்குவதை அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் கருதுகின்றனர். இந்தப் பறவைகள் வெளியேற்றும் கழிவுகளைச் சேகரித்து வைத்துத் தங்கள் வயல்களில் உரமாகப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கிராமத்தில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் இங்கு வரும் பறவைகளையும், அவற்றின் கூடுகளையும் பாதுகாக்கிறார்கள். காயமடைந்த அல்லது கூடுகளிலிருந்து விழும் குஞ்சுப் பறவைகளை மீட்டு தேவையான மருத்துவ உதவிகள் செய்து முழுமையாகக் குணமடையும் வரை கவனித்துக் கொள்கிறார்கள்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

இந்தச் சரணாலயம் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவை கூட்டத்தை ஈர்த்து வருகிறது. நீங்கள் பறவை காதலராக இருந்தாலும் சரி, இயற்கை காதலராக இருந்தாலும் சரி, இந்த அழகான இடம் கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டியது ஆகும். இங்கு வருபவர்கள் இந்த இடத்தின் அழகையும், கிராமவாசிகள் பறவைகளோடு இணக்கமாக வாழும் சூழ்நிலையையும் கண்டு சிலிர்ப்படையலாம். இந்தச் சரணாலயத்தில் உள்ள பார்வை கோபுரம், விளக்க மையம், குழந்தைகள் பூங்கா போன்றவற்றை ஆண்டு முழுவதும் பார்வையிடலாம். இந்தச் சரணாலயத்திற்கு பல்வேறு காலசூழ்நிலைகளில் பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, குளிர்காலங்களில் கிட்டத்தட்ட 10000 புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு வருகின்றன.

Flamingos at koothankulam bird sanctuary.

இந்த இடத்தின் இயற்கையான அழகும், கவர்ச்சியான பசுமையும் பறவை பார்வையாளர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை உண்டாக்குகிறது. இயற்கை அன்னையின் மடியில் இந்தக் கூந்தன்குளம் கிராமம் அமைந்துள்ளதால், இது இயற்கை காடுகள் மற்றும் குளங்களால் சூழப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மியான்மர், சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த பறவைகள் அனைத்தும் இங்குக் கூடு கட்டவும், தங்கள் குஞ்சுகளை வளர்க்கவும் இங்கு வருகின்றன. துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பறவைகள் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தந்து இந்த இடத்தின் மந்திர இயற்கை சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை தங்கள் வீடாக மாற்றும் பறவைகளின் வண்ணமயமான அணிவகுப்பை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு அதிகளவில் வருகிறார்கள்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

கூந்தாகுளம் பறவைகள் சரணாலயம் பரந்த அளவிலான இறகுகள் கொண்ட பறவைகளை தனது இடத்தே ஈர்த்துவிடுகிறது. இங்குக் காடைகள், வெள்ளை ஐபிஸ், கர்மரண்ட்ஸ், பாப்லர்ஸ், பார்ட்ரிட்ஜ்கள் போன்ற அரியவகை பறவைகள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வருகிறது. இது தவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இலங்கை, சைபீரியா, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து பறக்கும் எக்ரெட்ஸ், கிங்பிஷர்ஸ், ஃப்ளைகாட்சர்ஸ், மினிவெட்ஸ், வைட் ஐபிஸ், ஸ்பாட்-பில் வாத்துகள், கர்மரண்ட்ஸ், பெலிகன்ஸ் மற்றும் பெயிண்டட் ஸ்டோர்க்ஸ் ஆகிய பறவை இனங்களும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இங்கு வருகின்றன. அதோடு, சில சமயங்களில் சிப்மங்க்ஸ் மற்றும் ஃபெசண்ட்-வால் ஜகானாக்களையும் இங்குக் காணலாம். மேலும் கிரேட்டர் ஃபிளமிங்கோ, வெள்ளை நாரை ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியிலிருந்து வருகை தருகிறது. லடாக் பிராந்தியத்தைச் சேர்ந்த காமன் சாண்ட்பைப்பர் அதன் குடும்பத்துடன் இங்கு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர சைபீரியன் கூட் மற்றும் ஸ்பாட் சாண்ட்பைப்பர், பிண்டெயில், பல்லவன், க்ரீன் சாண்ட்பைப்பர், காமன் டீல் மற்றும் பார் ஹெட் கூஸ் ஆகிய பறவைகள் இந்தச் சரணாலயத்தின் நிரந்தர விருந்தாளிகள் ஆகும்.

Birds wading into the water in koothankulam bird sanctuary.

டாப்சிக் அல்லது லிட்டில் கிரேப், கிரே பெலிகன், பெரிய கர்மரண்ட், சிறிய கர்மரண்ட், கிரே ஹெரான், ஊதா ஹெரான், டார்டர் அல்லது பாம்புப் பறவை, பெரிய எக்ரெட், பாண்ட் ஹெரான், கால்நடை எக்ரெட், சிறிய அல்லது நடுத்தர எக்ரெட், லிட்டில் எக்ரெட், நைட் ஹெரான், பெயிண்டட் ஸ்டோர்க், சிறிய ராஜா மீனவர், பளபளப்பான ஐபிஸ், ஸ்பூன்பில், ஸ்பூன்பில் வாத்து, காட்டன் டீல் அல்லது பிக்மி கூஸ், இந்தியன் மூர்ஹென், ஊதா மூர்ஹென், ஃபெசண்ட்-வால் ஜகானா, வெண்கல சிறகுகள் கொண்ட ஜாகானா, பிராமண கைட், வெள்ளை மார்பக நீர் கோழி, கருப்பு-இறக்கைகள் கொண்ட ஸ்டில்ட் லாப்விங், பைட் கிங்பிஷர், வெள்ளை மார்பக கிங்பிஷர் மற்றும் இந்தியன் பைட் வாக்டெயில் ஆகியவை இந்தச் சரணாலயத்திற்கு வருகை தந்த பறவைகளின் பட்டியலில் இடம்பிடித்து உள்ளது. வனத்துறையிடமிருந்து கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் 43 க்கும் மேற்பட்ட நீர் பறவைகள் கூந்தன்குளத்திற்கு வருகை தருகின்றன, அவை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் அந்த இடங்களை விட்டு வெளியேறுகின்றன.

திருநெல்வேலியில் உள்ள இந்தப் பறவைகளின் சொர்க்கத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகிறார்கள். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்திற்கு ஒருபோதும் சிக்கலாக இருக்காது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூந்தன்குளத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, அரியகுளம் பறவைகள் சரணாலயத்தையும் கண்டு ரசிக்கலாம். நாட்டின் மிகவும் பிரபலமான சரணாலயங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை நாமும் நேரில் சென்று கண்டு மகிழ்வோம்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothkudi - 1hr 25min(78km)
  • Tirunelveli - 47min(33.7km)
  • Tiruchendur - 1hr 8min(45.8km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by பிரவீன்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram