நெல்லை மாவட்டம், பாபநாசம் பொதிகை மலையில் உள்ள அகத்தியர் அருவிக்கு அருகில் கல்யாண தீர்த்தம் என்னும் தீர்த்தக்கட்டம் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவிலும், திறந்தவெளியில் அகத்தியர் - லோபாமுத்திரை சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிக்கு செல்வதற்கு பக்தர்கள் அதிக அளவில் முன்னர் வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வனத்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த பகுதிக்கு செல்ல கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இங்குள்ள மலைப்பகுதியில் கடுமையான மழை பொழிந்ததால், தாமிரபரணியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் சேதமடைந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிருந்த அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாகவும், அங்கிருந்த கோவிலை அளிக்க சதிவேலை நடப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
ஆனால் இந்த திருமேனிகள் ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துவிட்டதாகவும், அப்போதே அந்த இடத்தில் புதிய அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு, உபயதாரர் மூலம் புதிய திருமேனிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அந்த திருமேனிகளும் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் இந்த புதிய திருமேனிகள் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பரவிய வதந்தியால் வருத்தத்தில் இருந்த பக்தர்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.