நெல்லை மாநகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஆழ்வார்திருநகரி என்னும் வைணவ திவ்ய தேச ஸ்தலம். இங்கு பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார், கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதியில் பெருமாளுக்கு நிகரான அந்தஸ்த்தில் எழுந்தருளி காட்சி தருகிறார். தாமிரபரணி நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோவிலில் பெருமாள் ஆதிநாதர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக விளங்கும் உறங்காப்புளி மரம் பல ஆயிரம் வருடங்கள் பழமையானதாகும். இந்த மரத்தின் அடியிலிருந்து நம்மாழ்வார் தவம் செய்ததாக சிறப்பித்து கூறப்படுகிறது.பொதுவாக புளிய மரத்தின் இலைகள் இரவில் மூடிக் கொள்ளும். ஆனால் இங்குள்ள மரத்தின் இலைகள் இரவிலும் மூடாமல் இருப்பதால் உறங்காப்புளி என்று அழைக்கப்படுகிறது. இந்த மரத்தை தரிசித்து வணங்கினால் பெருமாளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.