குடும்பம் என்பது கூடி வாழும் அமைப்பு. நம் பாரத நாட்டில் இந்த குடும்ப அமைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நம் முன்னோர்கள் தெய்வத்தையே தனியாக வழிபடாமல் குடும்பமாக தான் வழிபட்டனர். இதெல்லாம் ஆதியில் இல்லை பிற்காலத்தில் வந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும் இந்த முறை ஒரு நல்ல அணுகு முறை தான். சிவன் - பார்வதி - கணபதி - முருகன், விஷ்ணு - லக்ஷ்மி, பிரம்மா - சரஸ்வதி என்று குடும்பமாகவே கடவுளை கும்பிட்டு வருகிறோம் நாம்.
படைத்தல் , காத்தல், அழித்தல் இது மூன்றும் முத்தொழில்கள். இவற்றால் தான் உலகம் இயங்கி வருகிறது. கல்வி, செல்வம், வீரம் இந்த மூன்றும் முக்கிய பொருள். இவற்றை அழகாய் முத்தொழிலோடு இணைத்து உள்ளனர் குடும்பமாக.
கல்வி ஒருவருக்கு இருந்தால் அதை வைத்து நல்லவற்றை படைக்க வேண்டும். அதற்கு நாவன்மை அவசியம். ஆகவே கல்வித் தெய்வமான கலைமகள் படைப்பு தெய்வமான பிரம்மனுக்கு துணையாகி அவர் நாவில் இடம் பெற்று நாமகள் ஆகிறாள்.
செல்வம் இருந்தால் அதை நன்றாக காத்து பிறருக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருத்தல் அவசியம். எனவே செல்வத் திருமகள் காத்தல் புரியும் திருமாலுக்கு துணையாகி மார்பில் உறைகிறாள்.
வீரம் இருந்தால் அது தீயவற்றை அழிக்க வேண்டும் அதற்கு உடல் பலம் அவசியம். எனவே வீரத்திற்கு அதிபதியான உமை அழித்தல் தொழில் புரியும் ஈசனின் இடபாதி உடல் பெற்று திகழ்கிறாள்.
இப்படி யார் யாரை இணைக்க வேண்டும் என்று மிக அழகாக குடும்பமாக ஏற்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். மேலும் திருமாலை உமைக்கு அண்ணனாக்கி குடும்பமாக சைவ வைணவத்தை இணைத்தனர். விநாயகர் முருகன் என சிவ குடும்பம் குழந்தைகள் என அழகாய் வகுத்தனர்.
இப்படி இறைவனை குடும்பமாக வைத்ததன் தாத்பரியம் எல்லாம் நாம் குடும்பமாக மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தான். துறவறம் தான் முக்தி தரும் என்று சில சமயம் பேசிய காலத்தில் இல்லறமும் முக்தி தரும் என்று குடும்பமாக இறைவனையே நினைத்து வழிபட்ட சமயம் நம்முடையது. பல சிவன் கோவில்களில் இந்த குடும்ப முறையைக் காணலாம்.
இன்று இந்த உலக குடும்ப தினத்தில் நம் குடும்பம் சிறக்க இறை குடும்பத்தை வணங்கி மகிழ்வோம்.