தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆடி மாதம் அவ்வையார் நோன்பு கடைபிடிக்கும் வழக்கம் உண்டு. பொதுவாக இந்த அவ்வையார் நோன்பு பெண்களால் ஆடி மாதம், தை மாதம், மாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இதனை குறிக்கும் விதமாக "அசந்தால் ஆடி, தகுந்தது தை, மறந்தால் மாசி"ன்னு ஒரு சொலவடையே உண்டு. பெண்களால் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. இந்த நோன்பை பெண்கள் நல்ல கணவன் அமைய, கிடைச்ச கணவன் அன்பா இருக்க, குழந்தைப்பேறு கிடைக்க வேண்டி கடைபிடிப்பார்கள்.
நோன்பு கடைபிடிக்கும் முறை:
ஆடி செவ்வாயில் தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் வயது வித்தியாசமின்றி வயதில் மூத்த சுமங்கலி பெண்ணின் தலைமையில் மாலை வேளையில் அவ்வையார் விரதம் கடைபிடிக்கப்படும் வீட்டில் கூடிவிடுவார்கள். எல்லா பெண்களும் வரும் முன் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் அத்தனை நபர்களும் சிறு ஆண்குழந்தை கூட உட்பட அந்த வீட்டில் இருக்க அனுமதி இல்லை. ஆண்கள் இந்த நோன்பை பார்க்கவோ, இதுபற்றி பேசவோ இங்கு படைக்கப்படும் பிரசாதத்தை சாப்பிடவோ கூடாது என்பதும், நோன்பு கடைபிடிக்கும் முறை பற்றியோ, நோன்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் பற்றியோ ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது விதிமுறை. அப்படி யாராவது ஒரு ஆண் அதிக ஆர்வத்தில், நோன்பு நடக்கும் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தால் அவரின் கண்பார்வை பறி போய் விடும் என்பது நம்பிக்கை.
நோன்பு கடைபிடிக்கும் வீட்டிலிருக்கும் ஆண்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டை சுத்தப்படுத்தி, செம்மண் இட்டு மெழுகி, கோலம் போட்டு நோன்பு கடைபிடிக்க தயார் ஆவார்கள். நோன்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வரும் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், புங்க இலை, புளிய இலை ஆகியவற்றை ஒன்றாக கலந்து பூஜைக்கு பயன்படுத்துவார்கள். துவக்கமாக சாணத்தால் பிள்ளையார் பிடிச்சு வைக்க பூஜை ஆரம்பமாகும். அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து, உரலில் இட்டு கைகளால் இடித்து மாவாக்கி கொழுக்கட்டை தயார் செய்வார்கள். அவ்வையார் நோன்பில் இந்த கொழுக்கட்டைதான் நைவேத்தியத்துக்கு மிக முக்கியம் ஆகும். அதன் பின்னர் திருவிளக்கை ஏற்றி வைத்து பூஜைகள் செய்ய தொடங்குவார்கள். பிறகு அவ்வையார் அம்மன் வரலாறுகளும், கதைகளும் இரவு முழுக்க வயதில் மூத்த பெண் சொல்ல மற்ற பெண்கள் பயபக்தியுடன் அமர்ந்து கேட்பார்கள்.
பூஜையின் முடிவில், அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் பெண்கள் அனைவரும் தங்கள் மாங்கல்யத்தை காட்டுவார்கள். அந்த தண்ணீரில் தெரியும் பிம்பத்தை அனைவரும் கண்டு வணங்குவர். இறுதியில் நைவேத்தியமாக படைத்த உடைத்து வைத்த தேங்காய், வாழைப்பழம், கொழுக்கட்டை ஆகியவற்றை அனைவருக்கும் பிரித்து பிரசாதமாக வழங்குவார்கள். இந்த பிரசாதங்களை ஆண்களுக்கு கொடுக்கவோ, காட்டவோ கூடாது என்பதால் பெண்கள் அனைவரும் சாப்பிட்டு முடிப்பார்கள். பின்னர் பொழுது விடிவதற்குள் பூஜை செய்த தடமே தெரியாமல் வீட்டை சுத்தப்படுத்தி மொழுகி கழுவிய பின் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்று விடுவார்கள். அதன் பின்னர் தான் அந்த வீட்டு ஆண்கள் அந்த வீட்டிற்குள் நுழையலாம். இந்த வழிபாட்டை நடத்த வருடா வருடம் சுழற்சி முறையில் ஒவ்வொரு வீட்டை தேர்வு செய்வார்கள்.
சங்கக்கால பெண் புலவரான அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருக்கும் வழக்கம் தென்பாண்டி மற்றும் நாஞ்சில் நாட்டில்தான் உருவானதாக கூறப்படுகிறது. நாஞ்சில் நாட்டில் ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழக்குடிக்கு அடுத்து அவ்வையார் அம்மனுக்கு என தனிக்கோவில் உள்ளது. இங்கு அவ்வைக்கு நெல்லியடி அம்மன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் தான் அவ்வையார் முக்தி நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாநகர்., பாளையம்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கதாகவும்.