கல்விப் பாதையில் ஒரு மாணவனுக்குப் பத்தாம் வகுப்பு (S.S.L.C. - Secondary School Leaving Certificate) ஒரு திருப்பு முனையாகும். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் (State Syllabus), மத்திய அரசுப் பாடத்திட்டம் (CBSE - Central Board of Secondary Education), IGCSE (International General Certificate of Secondary Education), ICSE (Indian Council of Secondary Education) என்ற பாடத்திட்டங்கள் வழியாகப் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகிறார்கள்.
பத்தாம் வகுப்பு முடித்தபின் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பம், ‘‘அடுத்தது என்ன படிப்பது?’’ என்பதுதான். பத்தாம் வகுப்பிற்கு பின் என்ன படிப்பது என்பதை எப்படி முடிவு செய்வது தாங்கள் படிக்க விரும்பும் பாடம், பிளஸ் டூவிற்குப் பின் படிக்க வேண்டிய உயர்படிப்புகள், எதிர்காலத்தில் எந்தத் துறையில் பணிபுரிவது? என்ன சுயதொழில் வாய்ப்பு, ஆய்வு செய்ய விரும்பும் பாடம் என்ற காரணிகளைச் சிந்தித்து அதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
பள்ளியில் இடம், அல்லது ஒரு குறிப்பிட்ட பாடம் எடுக்கச் சொன்னார்கள், நண்பர்கள் எடுத்திருக்கிறார்கள், பெற்றோர்கள் கூறினார்கள் என்று எடுக்கக்கூடாது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் கலந்தாலோசித்து, சிந்தித்து படிக்க வைக்க வேண்டிய பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
C.B.S.E.-யில் படித்தவர்கள் அதே பாடத்திட்டத்தில் தொடர்வதும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் அதே பாடத்திட்டத்தில் படிப்பதும் சரியானதே. பாடத்திட்டம் எதுவானாலும் உழைத்து படிக்க வேண்டும் என்பதே முக்கியம். இப்பாடத்திட்டம் சிறந்தது, மற்றது சிறந்ததல்ல என்பது தவறான புரிதல். அனைத்துப் பாடத்திட்டத்திலும் அவசியமானவற்றை கல்விக்குழு தயாரித்திருக்கும்.
எந்தப் பாடத்திட்டத்தை எடுத்துப் படித்தாலும் ஆழமாகச் சிந்தித்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எடுக்க வேண்டும். இன்று, பத்தாவது அரசுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் முக்கியம்தான் எனினும், இவை அறிவை மதிப்பிடும் கருவியாகிவிடாது.
பொறியியல் பிரிவுகள், கட்டடக்கலை, கணிதம், இயற்பியல், வேதியியல், அறிவியல் ஆய்வு, கணித உயர்படிப்புகள், புள்ளியியல் என்ற பாடங்களில் ஆர்வமும், இவை தொடர்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள மாணவர்கள் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Science) என்ற பாடங்கள் உள்ள படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
அலோபதி பொது மருத்துவம், (M.B.B.S.) பல் மருத்துவம் (B.D.S), இந்திய மருத்துவமான ஆயுர்வேதம் (Ayurvedic - B.A.M.S. - Bachelor of Ayurvedic Medicine and Surgery), தமிழ் மருத்து வங்களான சித்தா (B.S.M.S - Bachelor of Siddha Medicine and Surgery), யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) - Bachelor of Naturopathy and Yogic Sciences),---- ஜெர்மானிய மருத்துவமானது ஹோமியோபதி (CBHMS - Bachelor of Homeopathy Medicine and Surgery), அராபிய மருத்துவமான யுனானி (BUMS - Bachelor of Unoni Medical and Surgery), விவசாயப் படிப்புகள், கால்நடை மருத்துவம், உயிர் தொழில்நுட்பம், துணை மருத்துவப் படிப்புகளான BPT (Bachelor of Physiotherapy), BOT (Bachelor of Occupational Therapy), B.Pham. (Bachelor of Pharmacy), பொறியியல், கட்டடக் கலை, கணினி இவற்றுடன் பொறியியல், கணினி, கட்டடக்கலை இவற்றில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் ‘‘கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்’’ பாடங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
B.Com., B.B.A., C.A. போன்ற உயர்படிப்பைத் தொடர விரும்புவர்கள் இதற்கான ‘‘வணிகக் கணிதம், பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல்’’ என்ற பாடங்களைத் தேர்வு செய்யலாம். சட்டம் படிக்க கட்டுப்பாடில்லை. பாதுகாப்புத் துறைக்குச் (Defense) செல்ல கணிதம், அறிவியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.
விமானி (பைலட்) பணிக்குச் செல்ல விரும்பு வர்கள் கணிதம், அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். கட்டடக்கலைக்கு முயற்சிச் செய்பவர்கள் உறுதியாக கணிதப் பாடப்பிரிவைப் படித்திருக்க வேண்டும். இவை தவிர செய்முறை அதிகமாக உள்ள பாடங்களை விரும்புவர்கள் இத்துறையில் உள்ள வொக்கேஷனல் (Vocational) படிப்பைத் தேர்வு செய்யலாம்.
இவை தவிர வரலாறு, புவியியல், ஹோம் சயின்ஸ், நியூட்ரிசன் போன்ற பாடங்கள் உள்ள குழுக்களும் உள்ளன. உயர் கல்வி, எதிர்கால நோக்கங்கள் இவற்றின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பை எடுக்க வேண்டும். தாய்மொழியோடு இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
கலைப்படிப்புகள், சட்டம், மானுடவியல் என்ற துறைகளில் உயர்படிப்பு படிக்க, பிளஸ்டூவில் வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல், உளவியல் போன்ற பாடங்கள் உள்ள குழுவைத் தேர்வு செய்யலாம். மொழிப்பாடங்களில் உயர்கல்வி படிக்க விரும்புவர்கள் அட்வான்ஸ் இங்கிலிஸ், அட்வான்ஸ் தமிழ் உள்ள குழுவைத் தேர்வு செய்யலாம்.
பத்தாம் வகுப்பிற்குப் பின், பன்னிரண்டாம் வகுப்பில் சேராமல், தொழில் பட்டயப் படிப்பை மேற்கொள்ள விரும்புவர்கள் என்னென்ன பட்டயப் படிப்புகள் உள்ளன என்பதை அறிய வேண்டும். இப்படிப்பிற்கு பின் வேலைக்கு முயற்சி செய்து, வேலைக்கு சென்று கொண்டே, பகுதி நேர பி.இ. படிப்பைப் படிக்கலாம்.
அல்லது Lateral Entry முறையில் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.இ. சேரலாம். இவர்கள், ஆட்டோ மொபைல், சிவில்,கெமிக்கல்,கணினி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன், எலக்ட்ரிக்கல் டெலி கம்யூனிகேசன், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூ மென்டேசன்,புரொடெக்சன் என்ஜினியரிங், மெக்கானிக்கல்,மெக்காட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் கணினி என்ற ஏதேனும் துறையில் பட்டயப்படிப்புகளை படிக்கலாம்.
இவை தவிர அட்பேரல் டிசைன், பேஷன் டிசைன், லெதர், பிளாஸ்டிக் என்ற பாடங்களிலும், பயோ மெடிக்கல், மெடிக்கல் லேப் என்ற பாடங்களிலும் பட்டயப் படிப்புகள் உள்ளன. அடிப்படைத் தொழிற்கல்வி படித்து வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள மாணவர்கள், சர்வேயர், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிசியன், இன்பியர்--- டெக்கரேசன், டிசைனிங், கம்யூட்டர் ஹார்ட்வேர், மோட்டர் மெக்கானிக், டீசல் மெக்கானிக், நெட்வொர்க் டெக்னிசியர் என்ற பாடங்களில் இண்டஸ்ட்ரியல் டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் (ITI - Industrial Training) படிப்புகளைப் படிக்கலாம்.
இப்படி ஐ.டி.ஐ-யில் படிப்பவர்கள், ஆல் இண்டியா டிரேட் டெஸ்ட் (All India Trade Test), நேஷனல் டிரேட் சர்ட்டிபிகேட் (National Trade Certificate) போன்ற சான்றிதழ்களைப் பெறலாம். பத்தாம் வகுப்பிற்குப் பின், பத்தாவது அடிப்படை கல்வித் தகுதியாக உள்ள T.N.P.S.C, S.S.C. தேர்வுகளை எழுதி வேலைக்குச் செல்ல முயற்சிக்கலாம். இவை தவிர, பத்தாவதற்குப் பின் இராணுவத்தில் சேரவும் வாய்ப்புண்டு.