விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில்
‘தென் நாட்டு பண்டரிபுரம்’ என்று சிறப்பிக்கப்படும் விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோவில்.
மூலவர்: பாண்டுரங்க விட்டலேஸ்வரர்.
உற்சவர்: பாண்டுரங்கன்.
தாயார்: ருக்மணி, சத்யபாமா.
தீர்த்தம்: தாமிரபரணி.
தல வரலாறு :
முற்காலத்தில் விஜய நகரப் பேரரசு மிகவும் சிறப்பாக விளங்கியது. அந்த காலத்தில் விட்டலராயர் என்னும் அரசன், தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள பகுதியை முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவரயன் வடக்கே உள்ள பண்டரிபுரத்தில் உறையும் பாண்டுரங்க பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவன். அவனுக்கு தினமும் பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது.
ஒருநாள் விட்டலராயன் பாண்டுரங்கரை நினைத்து கொண்டிருக்கையில் அவனுக்கு தான் தனது பகுதியில் பாண்டுரங்கனுக்கு ஓர் கோவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தான் வணங்கும் விட்ட பாணுடுரங்கனை தன் மக்கள் அனைவரையும் வழிபடச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உடன் உதித்ததால் தக்க தருணத்தை எதிர் நோக்கி விட்டலராயன் காத்திருந்தான்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் அரசன் கனவில் தோன்றிய பாண்டுரங்கரன், “மன்னா! தாமிரபரணி ஆற்றின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதக்கும். அதற்கு மேலே வானில் கருடன் வட்டமிடும் என்றும் மிதக்கம் பழத்தை பின் தொடர்ந்து சென்றால் ஓரிடத்தில் அந்த பழம் சுழன்று, தண்ணீரில் அப்படியே நிற்கும். அங்கே என்னுடைய விக்கிரகம் கிடைக்கும். அந்த விக்ரகத்தை கண்டெடுத்து மேலே பறக்கும் கருடன் வழிகாட்டும் இடத்தில் பிரதிஷ்டை செய்வாயாக” என்று கூறி மறைந்தார்.
பாண்டுரங்கனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அரசனுக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. உடனே தாமதிக்காமல் தன் வீரர்களுடன் தாமிரபரணி ஆற்றிற்கு சென்றான். அப்போது தாமிரபரணி ஆற்றில் பெருமாள் கனவில் கூறிய படியே, ஒரு எலுமிச்சை பழம் மிதந்து சென்றது. வானில் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அரசனும் படை வீரர்களும் அந்தப் பழத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்று நின்றது. அங்கு ஆற்றிற்குள் இறங்கி தேடிய போது, பாண்டுரங்கனின் அழகிய திருமேனி கிடைத்தது. பின்னர் கருடன் சென்ற பாதையை பின் தொடர்ந்து, பாண்டுரங்கனை எடுத்து சென்ற மன்னன், கருடன் அடையாளம் காட்டிய பகுதியில், பாண்டுரங்கனை பிரதிஷ்டை செய்து கோவில் ஒன்றையும் சிறப்பாக எழுப்பினார். அந்த கோவிலை சுற்றி ஊர் ஒன்றையும் உருவாக்கிட, அது விட்டலராய அரசன் பெயரால் ‘விட்டிலாபுரம்’ என அழைக்கப்பட்டது.
தான் கட்டிய அந்த கோவிலில் அரசன் விட்டலராயன் தினமும் அங்கு நித்ய பூஜைகள் நடைபெற ஏராளமான நில புலன்களை எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
வடக்கே உள்ள பண்டரிபுரம் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபடலாம் என்று கூறப்படுகிறது.
மூலவர் பாண்டுரங்க விட்டலேஸ்வரர்:
கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் ‘பாண்டுரங்க விட்டலேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமா சகிதராக காட்சித்வதருகிறார்.
உற்சவர் பாண்டுரங்க பெருமாள்:
இங்கு உற்சவர் மண்டபத்தில் ‘பாண்டுரங்கன்’ என்ற திருநாமத்துடன், நான்கு திருக் கரங்களுடன் நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமா, பூமா தேவி, ஸ்ரீ தேவி, நீலா தேவி சகிராக காட்சித் தருகிறார்.
திருக்கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கி அமையப்ஙபெற்றுள்ள இந்ம கோவிலின் முகப்பில் 16 தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கிறது. அதனை அடுத்து உள்ளே சென்றால் பெரிய மண்டபமும் அதில் பலிபீடம், கொடிமரம், கருவறையை நோக்கிய கருடன் சன்னதி ஆகியவையும் காணப்படுகின்றன. இங்குள்ள கொடிமரம் மூலவர் விமானத்தை காட்டிலும் மிக உயரமாக காணப்படுவது சிறப்பு.
கருவறையை சுற்றி பிரகாரத்தில் ருக்மணி, சத்யபாமா, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலின் தூண்களில் நேர்த்தியான சிறு சிறு சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் சிறப்புக்கள்:
இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.
இந்த கோவில் பூலோக வைகுண்டமாக விளங்குவதால் இங்கு சொர்க்க வாசல் கிடையாது.
முற்காலத்தில் இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்தியிருக்கிறார்கள்.
இங்கு பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்களுள் திரட்டுப்பால், பால்பாயசம் மிக சிறப்பானது ஆகும். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வியில் குழந்தைகள் சிறந்து விளங்க பக்தர்கள் பால் பாயசம் நிவேதனம் செய்து பெருமாளை வழிபடுகிறார்கள்.
இங்குள்ள பெருமாள் கிருதா யுகத்தில் பிரம்மாவாலும், திரேதா யுகத்தில் முதலையால் துன்பப்பட்ட கஜேந்திரனாலும், துவாபர யுகத்தில் பிரகஸ்பதியாலும் பூஜிக்கபட்ட சிறப்புடையவர்.
தற்போது இந்த கலி யுகத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக நமக்கு காட்சியளிக்கிறார் இத்தல பெருமாள்.
இந்தக் கோவில் 1547-ம் வருடம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. போர்கள் பல ஏற்பட்ட காரணத்தினால் இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போதும் ராஜகோபுரம் இன்றியே கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த கோவில்.
முக்கிய திருவிழாக்கள்:
இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமாக இருக்கும்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம் :
திருநெல்வேலி மாநகரில் இருந்து மேற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது விட்டிலாபுரம். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் வசதி உள்ளது. இந்த கோவிலை திருநெல்வேலி – தூத்துக்குடி சாலையில் உள்ள வசவப்புரம் வழியாகவும், திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் உள்ள செய்துங்கநல்லூர் வழியாகவும் சென்று அடையலாம்.
-திருநெல்வேலிக்காரன்.