"நெல்லை" என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில் 'திருநெல்வேலிச் சீமை' என அழைக்கப்பட்டது. பாண்டியர்கள் பிரதானமாய் வாழ்ந்த இரண்டாம் பெரும் தலைநகரமாக விளங்கியது. சுருக்கமாக. இந்தத் திருநெல்வேலி நகரம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியைக் கொண்டது.
தாமிரபரணி நதிக்கரையில் அமையப்பெற்ற அழகிய நகரம் திருநெல்வேலி. இந்த நகரம் பல்வேறு வரலாற்று, இலக்கிய சிறப்புகளைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சுற்றி உள்ள அநேக கோவிலிலும் பாண்டிய வம்சத்தைப் பற்றிய குறிப்புகள் பழங்கால கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளன, அவை இன்றும் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் தான் வரலாற்று சமய ஸ்தலமாய் திருநெல்வேலி பெருமை பெற்றுள்ள நகரமாய் விளங்குகிறது.
திருநெல்வேலியின் வரலாற்று புத்தகத்தில் பல அத்தியாயங்களில் அரசியல் பங்களிப்பு பற்றிய முழு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி சீமையில் பாண்டியரின் ஆட்சி காலம் அரசியல் பங்கு அனைத்தும் புகழ்பெற்ற ஒரு காவியமாய் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், விஜயநகர பேரரசு மற்றும் சோழ வம்சத்தின் ஆட்சி காலத்தின்போது, திருநெல்வேலி இன மற்றும் அரசியல் போக்கில் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாண்டிய வம்சம் பொதுவான சகாப்தத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்கிறது. அதற்கான ஏராளமான சான்றுகள் இன்றும் உள்ளன. திருநெல்வேலி 1064 ஆம் ஆண்டில் சோழ வம்சத்தைச் சேர்ந்த கங்கைகொண்ட சோழன் ஆட்சிக்கு வந்தான். 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அந்த ஆட்சி காலம் தொடர்கின்றது. இதற்கு சான்றாக திருநெல்வேலிக்கு அருகே கங்கைகொண்டான் என்னும் ஊர் இன்றும் இருக்கிறது.
அதன்பின்பு மீண்டும் இப்பகுதி வலிமைமிக்க மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தலைமையில் மாறுகின்றது. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யத்தின் மேலாதிக்கத்தின் கீழ் செல்கின்றது.. குலசேகர பாண்டியனின் மறைவுக்குப் பிறகு, திருநெல்வேலி 16 ஆம் நூற்றாண்டில் மராவா தலைவர்கள் மற்றும் விஜயங்கரா ஆட்சியாளர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்றப்படுகிறது.பின்னர் வந்த காலகட்டத்தில் திருநெல்வேலி விஸ்வநாத நாயக்கரின் (மதுரை நாயக் இராச்சியத்தின் முதல் மன்னர்) கீழ் மதுரை நாயக்கர்களின் துணை தலைமையகமாக இருந்தது.
1736 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கர்களின் ஆட்சியமைப்பு நிறுத்தப்படுகிறது. அந்தப் பகுதியைச் சாந்தா சாஹிப் கைப்பற்றுகிறார். 1743 ஆம் ஆண்டில், திருநெல்வேலி கர்நாடகத்தின் நவாப்களின் ஆட்சியின் கீழ் வந்தது. திருநெல்வேலி நாயக்கர்கள் மற்றும் நவாப் ஆட்சியின்போது அது ஒரு முக்கியமான வணிக மையமாக மாற்றப்பட்டது.இப்பகுதி பிரபலமாக நெல்லை சீமை (சீமை என்பதன் பொருள் - வளர்ந்த வெளிநாட்டு நகரம்) என வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் துரதிர்ஷ்டவசமான தோல்வியைக் கண்ட பாலிகர் போர்களுக்குப் பிறகு, திருநெல்வேலி கர்நாடகத்தின் நவாப்களிடமிருந்து ஆங்கிலேயர்களின் வசம் ஆனதால் அதற்கு "டின்னெவெல்லி" என்று பெயர் மாற்றம் செய்து அழைத்து வந்துள்ளனர்.
பாண்டியர்கள் வாழ்ந்த காலத்தில் தென்பாண்டிய நாடு, தென்பாண்டிய சீமை, என அழைக்கப்பட்டு பின்பு சோழர்களால் சோழமண்டலம் என்றும் நாயக்கர்கள் வாழ்ந்த பொழுது திருநெல்வேலி சீமை என்றும் பெயர் கொண்டு , ஆங்கிலேயர்களால் தின்னெல்வேலி என்றும் அழைக்கப்பட்டு , பல பெயர்களை தாங்கி நிற்கும் திருநெல்வேலி மாநகரம் 'திருநெல்வேலி' என பெயர் வந்தது மிகவும் ஒரு சுவாரசியமான வரலாறு.
வேதபட்டர் எனும் ஏழை சிவபக்தர் சிவபெருமானின் மீது அதீக ஈடுபாடு கொண்டு, ஊர் ஊராகச் சென்று சிவபெருமானை வழிபட்டு வருகிறார். ஒருமுறை வேணு வனம் என்று அழைக்கப்படும் திருநெல்வேலிக்கு வருகை புரிகின்றார் . அங்கு சில காலம் தங்கி இருந்து சிவனுக்கு நித்திய பூஜைகள் செய்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார்.
அந்த சமயத்தில் அவரிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தும் தீர்ந்து போகின்றது . சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இறைவனுக்கு படைக்கக்கூடிய பூஜைகளோ அன்னதானமோ தடையேதும் வராது காத்தருள வேண்டும் என்று பெருமானை வேண்டுகிறார் .
வேறு வழி அறியாது வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்டு நெல்மணிகளை வாங்கி வந்து அதனைக் கொண்டு தொடர்ந்து அன்னதானமும் செய்து வருகிறார்.
தன்னுடைய பக்தனை சோதித்துப் பார்ப்பது சிவபெருமானுக்கே உரித்த விளையாடல். வேதப்பட்டரின் மேல் உள்ள அன்பின்பால் தன்னுடைய திருவிளையாடலை தொடர்கின்றார்.
அன்று வேதப்பட்டர் யாசகம் பெற்று வாங்கிய நெல் மணிகளை அன்னதானம் வழங்கும் பொருட்டு, வெயிலில் காய வைத்து விட்டு தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க செல்கின்றார். மழை பொழிய ஆரம்பித்து விட்டது..
ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் நெல் மணிகள் என்ன ஆவது! என்று பதறியவாறு வீட்டிற்கு ஓடி வருகிறார். நெல்மணிகள் அனைத்தும் தண்ணீரிலே காணாது போனால் அன்னதானத்திற்கு என்ன செய்வது! என்ற கவலையோடு ஓடி வருகிறார் .
அங்கு வந்து பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. காயப் போட்டிருந்த நெல் மணிகள் மட்டும் நனையாது வேலிடப்பட்டவாறு பாதுகாக்கப்பட்டு இருந்தது . இதைக் கேள்விப்பட்ட அனைத்து மக்களும் ஓடிவருகின்றனர். கேள்விப்பட்ட பாண்டிய மன்னரும் வந்து இந்த அதிசயத்தை பார்க்க அனைவரும் மெய்யுருகி கைகூப்பி நின்றனர்.
சிவபெருமானின் திருவிளையாடல் கண்டு வேதப்பட்டர் கண்களில் கண்ணீர் மல்க செய்வதறியாது நிற்கின்றார் . அன்று முதல் சிவபெருமான் மேல் மேலும் அதிக பக்திகொண்டு அந்த ஊரிலேயே தங்கி தொடர்ந்து சிவத்தொண்டு செய்து வந்தார். அவர் வணங்கிய சிவபெருமானின் ஆலயமே இன்றும் நெல்லையப்பர் கோவில் என புகழ்பெற்ற திருத்தலமாக காணப்படுகின்றது.
நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று பெயர் பெற்ற அந்த ஊர் ' நெல் வேலி ' என்று மறுபெயர்ப்பாகி திரு எனும் வார்த்தையும் சேர்ந்து உருபெற்று அழகு பெற்று திருநெல்வேலி என்ற புகழ் பெற்ற மாநகரமாக இன்று விளங்குகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ், திருநெல்வேலி மாவட்டம் இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பிராந்திய ஆதிக்கங்களையும், ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின் சில பிரிவுகளையும் உள்ளடக்கி இருந்தது. 1910 ஆம் ஆண்டில், ராமநாதபுரம் மாவட்டம் மதுரை மற்றும் திருநெல்வேலி பிரதேசங்களின் சில பகுதிகளிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது, இது இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் அக்டோபர் 20, 1986 அன்று தூத்துக்குடி வ.ஊ.சிதம்பரனார் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது. இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாகத் திருநெல்வேலி மாநகரம் திகழ்கிறது.
நம் நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற மாபெரும் வீரர்களை பெற்ற பெருமை திருநெல்வேலியையே சாரும். அதிலும் ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் ஒட்டிய சிதம்பரம் பிள்ளையின் துணிவும், யாரிடம் கேட்கிறாய் வரி என ஆங்கிலேயர் முன்னர் நெஞ்சம் நிமிர்த்தி வீர வசனம் பேசிய வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், ஆங்கிலேய ஆட்சித்தலைவரையே சுற்றுக்கொன்ற வாஞ்சிநாதனின் தேசப்பற்றும் இன்றும் திருநெல்வேலியின் பெருமையைப் பறைசாற்றும்.
புகழ்பெற்ற மொழியியலாளரும், திருநெல்வேலியின் பிஷப்புமான பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1877 ஆம் ஆண்டில் திருநெல்வேலியின் வரலாறுகுறித்து விரிவான ஆராய்ச்சி செய்தார். திருநெல்வேலியின் அசல் வரலாற்றைப் புரிந்துகொள்ளச் சங்க இலக்கியங்களையும் (473 தமிழ் கவிஞர்களால் இயற்றப்பட்ட 2,381 வசன வடிவங்கள்) மற்றும் ஏராளமான பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளையும் அவர் ஆய்வு செய்தார். தனது ஆராய்ச்சியின் இறுதி கட்டத்தில், ராபர்ட் கால்டுவெல் ஏராளமான அகழ்வாராய்ச்சிகளைக் கொண்டு வந்து, பழமையான கட்டுமானங்கள், மீன் சின்னம் அச்சிடப்பட்ட நாணயங்கள் மற்றும் பாண்டியன் வம்சத்தின் இறுதிச் சடங்குகள் ஆகியவற்றின் மூலக்கற்களைக் கொண்டு வந்தார். 1881 ஆம் ஆண்டில், ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலியின் வரலாறுகுறித்த தனது ஆராய்ச்சியின் முடிவுகளைச் செயின்ட் ஜார்ஜ் கோட்டை (மெட்ராஸ் பிரசிடென்சி) பிரசுரத்தால் வெளியிடப்பட்ட 'டின்னெவெலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற புத்தகத்தில் வெளியிட்டார். . திருநெல்வேலியின் அசல் வரலாற்றை வெளியிடுவதில் ராபர்ட் கால்டுவெல்லின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை. இதன் நினைவாகத் தமிழக அரசு அவரைக் கௌரவிக்கும் பொருட்டு அவர் படத்தைக் கொண்ட தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பு சேர்த்தது.
வற்றாத ஜீவநதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி ஓடும் அழகுதனை ஏந்தி நிற்கும் மாபெரும் நகரமாக திருநெல்வேலி விளங்குகின்றது.
களக்காடு - முண்டந்துறை போன்ற வனவிலங்கு சரணாலயங்களையும், கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்தையும், பார்க்கும்பொழுது கவலைகளை மறந்து மனம் மகிழ்வு தரக்கூடிய பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக காட்சி அளிக்கிறது.
மாஞ்சோலை - கோதையாறு - குதிரைவெட்டி போன்ற மலைவாசஸ்தலங்களும் நம், தமிழ் மண்ணின் சிறப்பினை எடுத்து கூறும் வகையில் திருநெல்வேலி மிக அழகிய மாநகரமாய் விளங்குகிறது.
பொதிகை மலையையும், குற்றாலம் நீர் வீழ்ச்சியையும், மணிமுத்தாறு - காரையார் - சேர்வலாறு போன்ற பெரிய அணைக்கட்டுகளையும், பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய முத்துக்குளிக்கும் துறையான கொற்கை துறைமுகத்தையும், கொண்ட பண்டைய கால வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய பூமியாகவும் அழகு பெறுகின்றது.
குறிஞ்சி - முல்லை - மருதம் - நெய்தல் - பாலை போன்ற ஐந்து வகை நிலப்பரப்புகளையும், காணும் போது வேதங்களின் சிறப்பினை கூறும் புவி நிலங்களாகவும் அமையப்பெற்ற பெருமைமிகு மாநகரமாய் காட்சிதருகின்றது.
திருச்செந்தூர் - குலசேகரப்பட்டினம் - திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் - அருள்மிகு தென் காசி சிவன் கோயில் - திருப்புடைமருதூர் கோவில் - பிரம்மதேசம் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் கோவில் - மன்னர் கோவில் - சிவசைலம் - நவத்திருப்பதிகள் போன்ற ஆன்மீக கோவில்களும் நிறைந்து இருக்கின்றது.
அனைத்து அம்சங்களும் கொண்ட சுற்றுலா தலங்களையும் தன்னகத்தே கொண்டு, பச்சை பசும் வயல்வெளிகள் சூழ்ந்த இடமாக இந்தத் திருநெல்வேலி மாவட்டம் அமையப்பெற்றுள்ளது.