Logo of Tirunelveli Today
English

Tirunelveli Thondargal Nainar Thirukovil

Front view of thondarkal nainar temple.

திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் திருக்கோவில்

திருஞானசம்பந்தர் பெருமான், அகத்தியர் மற்றும் தொண்டர்கள் பதினாராயிரவர் வணங்கிய திருமேற்றளியுடைய நயினார் திருக்கோவில்.

சுவாமி பெயர்: திருமேற்றளி உடைய நயினார் (எ) தொண்டர்கள் நயினார்.

அம்மை பெயர்: கோமதி அம்மை (எ) ஆவுடைநாயகி அம்மை.

திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தங்கள்: பஞ்ச தீர்த்தம், தாமிரபரணி.

திருக்கோவில் வரலாறு:

Black idol of sri thondarkar nainar swami.

முற்காலத்தில் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான, திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டில் தல யாத்திரை மேற்கொண்டார். அப்போது திருக் குற்றாலம் சென்று குற்றாலத்துறை கூத்தரை வணங்கி, பதிங்கள் பாடி மகிழ்ந்த சம்பந்தர் தன் தொண்டர்கள் குழாம் புடை சூழ திருநெல்வேலிக்கு வருகிறார்கள். அப்போது அவருடன் வந்த அடியார்கள் ஆகிய சைவ தொண்டர்கள், தாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என விரும்புவதாக சம்பந்தப் பெருமானிடம் தெரிவிக்கின்றனர். சம்பந்தரும் தன் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, அகத்தியரை எண்ணி மானசீகமாக வழிபட்டு அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டினார். அங்கு வந்த அகத்தியப் பெருமான் வில்வ வனமாக இருந்த அந்த பகுதியின் ஓர் இடத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக இருப்பதனை கண்டறிந்து அந்த சிவலிங்கத்தை வில்வ மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்திட, சம்பந்தர் மற்றும் அடியார்கள் அந்த சிவலிங்கத்திற்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டார்கள். அவர்களின் பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவபெருமான், "தொண்டர்கள் நயினார்" என்ற பெயரும் பெற்றார்.

கருவூர் சித்தருக்கு அருள்புரிந்த வரலாறு:

முற்காலத்தில் கருவூர் சித்தர் என்பவர் நெல்லை நகருக்கு எழுந்தருளி நெல்லையப்பரை தரிசிக்கும் பொருட்டு, திருக்கோவிலை அடைந்து "நெல்லையப்பா" என மூன்று முறை அழைக்கிறார். தான் அழைத்தவுடன் தன் முன் சிவபெருமான் தோன்றி காட்சியளிக்கும் வரத்தை பெற்றிருந்த சித்தர், நெல்லையப்பரை அழைத்தும் அவர் காட்சியளிக்காத காரணத்தால் இங்கு இறைவன் இல்லை, எனவே எருக்கும் குருக்கும் எழுக என சாபமிட்டு விட்டு வடக்கு நோக்கி பயணமாகிறார். அப்போது கருவூர் சித்தர் முன் ஓர் ஜோதி வடிவில் சிவபெருமான் காட்சி அளிக்க, அந்த ஜோதியை பின் தொடர்ந்து கருவூர் சித்தர் செல்ல, அந்த ஜோதியானது இந்த தொண்டர்கள் நயினார் கோவிலுக்குள் உள்ள சிவலிங்கத்துக்குள் சென்று ஐக்கியம் ஆகி விட்டதாக ஒரு வரலாறும் கூறப்படுகிறது. இதன் பின்னர் மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளிக்க, அதன் பின் கருவூர் சித்தர் மீண்டும் திருநெல்வேலி அடைந்து சாபத்திற்கு விமோசனம் அளித்தார்.

சுவாமி தொண்டர்கள் நயினார்:

Well-decorated siva lingam with flowers.

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனியாக காட்சித் தருகிறார் தொண்டர் நயினார். தன் தொண்டர்களுக்காக எழுந்தருளிய பெருமான் என்பதால் மிகுந்த வரப் பிரசாதியாக இங்கு காட்சித் தருகிறார்.

அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

அம்மை கோமதி:

கிழக்கு நோக்கிய தனிக் கருவறையில் சற்றே இடை நெளித்து, ஒரு கரத்தில் மலர் தாங்கியும், மற்றொரு கரத்தை கீழே தொங்கவிட்டும், நின்ற கோலத்தில் செவ்விதழ்கள் புன்சிரிப்பு காட்டியபடி பிரம்மாண்ட திருமேனியாக காட்சித் தருகிறாள் அம்மை கோமதி தாய்.

திருக்கோவில் அமைப்பு:

திருநெல்வேலியுறை செல்வர் திருக்கோவிலுக்கு வட மேற்கு முனையில் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது தொண்டர் சன்னதி என்று வழங்கப்படும் கோமதி அம்மை உடனுறை தொண்டர்கள் நயினார் திருக்கோவில்.

முகப்பில் சிறிய மூன்று நிலை கோபுரம் அமையப் பெற்றுள்ளது. இந்த கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நந்தி மற்றும் பலி பீடம் உள்ளது. அதனை தாண்டி முன் மண்டபத்தில் காட்சித் தரும் விநாயகரை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் லிங்க திருமேனியாக தொண்டர்கள் நயினார் காட்சித் தருகிறார்.

சுவாமி சன்னதிக்கு உள் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக நால்வர், சப்தமாதர், சுரதேவர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், மகாலட்சுமி, லிங்க நாதர், சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர் - சிவகாமி அம்மை ஆகியோர்கள் காட்சித் தருகிறார்கள்.

வெளிப்புற முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதியும், பைரவர் சன்னதியும் இருக்க, வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், தல விருட்சமாகிய வில்வ மரமும் உள்ளன. சுவாமி கோவிலுக்கு வட பக்கம் அம்மை கோவில் தனியாக இருக்கிறது. அம்மை கோவிலுக்கு எதிரே வன்னி மரத்தடி விநாயகர் சன்னதியும் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

திருக்கோவில் சிறப்புக்கள்:

Inner view of thondarkal nainar sannathi.

இங்கு வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை சங்கராச்சாரியார் பிரதிஷ்டை செய்ததாக தலப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கு கோமதி அம்மை சன்னதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள சிவபெருமானுக்கு தொண்டர்கள் நயினார், ஆதி மூல நாதர், வில்வ வன நாதர், திருமேற்றளி உடைய நயினார் ஆகிய பெயர்கள் உள்ளன.

இங்கு திருஞான சம்பந்தர், அகத்தியர் மற்றும் கருவூர் சித்தர் ஆகியோர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கு அம்மை கோவில் பின்புறம் அரச மரத்தடி சன்னதியில் மேற்கு நோக்கிய விநாயகரும், கிழக்கு நோக்கிய விநாயகரும் ஒரே இடத்தில் காட்சித் தருவது சிறப்பு.

இங்கு திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளி, அகத்தியரின் ஆலோசனைப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்திட, தேவ பாண்டியன் என்னும் மன்னனால் இத் திருக்கோவில் கட்டப்பட்டு காரண ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இங்கு திருஞானசம்பந்தர் சிவ பூஜை மேற்கொண்டு, திருநெல்வேலி நெல்லையப்பர் மீது "திருநெல்வேலி பதிகம்" பாடியுள்ளார்.

இந்த கோவிலில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த பின்னர், இங்கு திருஞானசம்பந்தர் பெருமானே ஒரு கிணறு வெட்டி, அதில் சுரந்த நீரால் இத் தல பெருமானுக்கு அபிஷேகம் செய்தருளினாராம். இன்றும் அந்த கிணற்று நீரே இங்கு சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.

முற்காலத்தில் இக் கோவிலில் கொடிமரம் இருந்ததாகவும், தை மாத பூச நட்சத்திரத்தை ஒட்டி கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றதாகவும், ஒன்பதாம் நாள் தேரோட்டம் மற்றும் பூசத்தன்று தீர்த்தவாரி நடைபெற்றதாகவும் இத் தல புராணத்தில் குறிப்புள்ளது. ஆனால் தற்போது கோவிலில் கொடி மரமும் இல்லை, தைப் பூச உற்சவமும் இல்லை.

Rituals performed by three priests in nainar swami temple.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் பெருமான், சிவபெருமானை பூஜித்த விழா நடைபெறும்.

ஐப்பசி மாதம் கோமதி அம்மை திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.

ஆவணி மூலம், கார்த்திகை மாத சோமாவார பூஜை, மார்கழி திருவாதிரை விழா, தை அஸ்தம், தைப் பூசம், மாசி சிவராத்திரி ஆகிய உற்சவங்களும் மாதாந்திர பிரதோஷம் மற்றும் பெளர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம் :

திருநெல்வேலி மாநகரில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வட மேற்கில் அமையப் பெற்றுள்ளது தொண்டர் சன்னதி. இங்கு செல்ல நிறைந்த பேருந்து வசதிகள் உள்ளன.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothkudi - 1hr 12min(55km)
  • Tirunelveli - 27min(9.4km)
  • Tiruchendur - 1hr 57min(61km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by லட்சுமி பிரியங்கா
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram