திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இப்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது நாம் எல்லாம் ஏதாவது குளிர்பிரதேசங்களுக்கு போக வேண்டும் என்று நினைப்போம். பெரிய செல்வந்தர்கள் எல்லாம் தனியே விருந்தினர் மாளிகைக்கு சென்று குளிர்ச்சியாக ஓய்வு எடுப்பர். அதே போல் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு வெயிலின் வெம்மை குறைய நிகழ்த்தப்படுவதே இந்த வசந்த உற்சவம்.
திருநெல்வேலியில் சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்மைக்கு நடைபெறும் வசந்த உற்சவத்தில் இன்று ஏழாம் நாள் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை வசந்த மண்டபத்தில் வெற்றிவேர் பந்தலின் கீழ் எழுந்தருள்வர். வசந்த மண்டபத்தை சுற்றி உள்ள அகழி போன்ற அமைப்பில் நீர் நிரப்பப்பட்டு இருக்கும். இங்கு வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஹோமங்கள் உடன் கூடிய கலச பூஜை நடைபெற்று பின்னர் பகலில் குளிர்ச்சி பொருந்திய பலவகை நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் . இறுதியாக கலச நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.
இதனை தொடர்ந்து மாலையில் வசந்த மண்டபத்தில் சுவாமி - அம்மை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா சோடச தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். பின்னர் சுவாமி மற்றும் அம்மை கேடயத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் உள்ள நந்தவனத்தின் வழியாக பதினோரு முறை சுற்றி வரும் வைபவமும் நடைபெறும். இன்று நடைபெறும் இந்த உற்சவத்தில் கொரோனா இரண்டாம் அலை நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.