திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவில். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் கோடை கால வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 26/04/21 ஆம் தேதி பொற்றாமரைகுளத் தீர்த்தவாரி முடிந்து, மறுநாள் 27/04/21 ஆம் தேதி தொடங்கி நேற்று 07/05/21 ஆம் தேதி வரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழா நடைபெற்ற நாட்களில் சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோயிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்குள்ள அகழி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு ரம்மியாக காட்சியளித்தது. தண்ணீர் நிரம்பிய அகழிக்கு நடுவில் உள்ள மண்டபத்தில் வெற்றிவேற் பந்தலின் கீழ் எழுந்தருளிய அம்மையப்பருக்கு சிறப்பு யாகங்களுடன் கூடிய அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் வசந்த மண்டபத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் இறுதி நாளான நேற்று வசந்த மண்டபம் முழுவதும் வித விதமான மலர்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அழகாக காணப்பட்டது. மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மைக்கும் வித விதமான மலர் மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக திருக்கோவில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் மற்றும் திருக்கோவில் ஊழியர்களை கொண்டு இவ்விழா இனிதே நடைபெற்றது. சுவாமி அம்பாளை கோடை வெப்பத்தில் இருந்து குளிர்விக்கும் பொருட்டு நடத்தப்படும் இவ்விழாவின் இறுதி நாளான நேற்று மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.