நெல்லை மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோவில். மிகப்பெரிய பரப்பளவில் இரு பெரும் கோவிலாக அமையப்பெற்றுள்ள இந்த திருக்கோவில் எண்ணற்ற பல சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்குள் உள்ள மணி மண்டபத்தில் காணப்படும் சங்கீதத் தூண்கள் சிறப்பு பெற்றவையாகும். இங்குள்ள மணி மண்டபத்தின் முன்பக்கம் பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்க, அதனைச் சுற்றி ஒலி எழுப்பக்கூடிய சிறு சிறு இசை தூண்கள் காணப்படும். இந்த ஒவ்வொரு சிறிய இசை தூண்களிலும் ஒரு சிறு குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு விதமான சங்கீத ஸ்வரங்கள் எழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம் ஆகும்.