Logo of Tirunelveli Today
English

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை(Panchalankuruchi Fort)

வாசிப்பு நேரம்: 10 mins
No Comments
Front view of Panchalankurichi Veerapandiya Kattabomman Fort

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை (Veerapandiya Kattabomman Memorial Fort)

திருநெல்வேலியிலிருந்து 48 கி.மீத்தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 28 கி.மீத் தொலைவிலும் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிறிய கிராமம் பாஞ்சாலங்குறிச்சி. இந்த ஊரிலிருந்து தான் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பினார். அவர் வாழ்ந்த கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, சிதைக்கப்பட்டு விட்டதால், அதே இடத்தில் தமிழக அரசு 1974 இல் தற்போதுள்ள கோட்டையைக் கட்டபொம்மனின் நினைவாகக் கட்டி எழுப்பியது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபமாகத் திகழும் இங்கு, அவரின் வீரச் செயல்களைச் சித்தரிக்கும் வண்ணம் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது அந்தக் காலத்தின் வரலாற்றைப் பற்றி நமக்கு ஒரு நல்ல யோசனையைத் தருகிறது. கட்டபொம்மனின் பரம்பரை தெய்வமான ஸ்ரீ தேவி ஜக்கம்மா கோயில் இந்த கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. கோட்டையின் அருகே ஆங்கிலேய வீரர்களின் கல்லறையும் காணப்படுகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பழைய கோட்டையின் எச்சங்களை பாதுகாக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கயத்தாறில் மற்றொரு நினைவுச் சின்னம் உள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிய கஞ்சாலங்ட்டபொம்மன் கோட்டை (பாகுறிச்சி) 8 ° 56’01.4 “N 78 ° 02’02.4” E அல்லது 8.933722, 78.033994 என்ற புவியமைப்பில் அமைந்துள்ளது. இந்த கோட்டையில் மாவீரன் கட்டபொம்மனின் சிலை தவிர, ஊமைத்துரை, தனாதிபதி பிள்ளை, சுந்தரலிங்கம், வெள்ளையா தேவர் ஆகியோரின் அரை அளவு சிலைகளும் நினைவுச் சின்னங்களாக காணப்படுகின்றன. இங்கிருந்து குறுக்குச்சாலை முதல் கோட்டை வரை ஜக்கம்மா தேவியின் நினைவாக ஏழு வளைவுகள் உள்ளன. இந்த கோட்டைக்கு செல்ல தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன. இந்த கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 மற்றும் மே இரண்டாவது வாரங்களில் கட்டபொம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நடைபெறும் சிறிய காளை மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை அதிகளவில் பாஞ்சாலங்குறிச்சி பக்கம் ஈர்க்கிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வரலாறு (Panchalankurichi Veerapandiya Kattabomman Fort History):

பாஞ்சாலங்குறிச்சியில் முன்னர் வாழ்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான கட்டபொம்மன் நினைவாக இந்த கோட்டை தமிழக அரசாங்கத்தால் 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முற்காலத்தில் இங்கு வாழ்ந்த கட்டபொம்மன், ஆங்கிலேய அதிகாரிகளின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டார். ஆனால் உண்மையில், அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு போரை நடத்தினார் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். இது 1857 இல் வட இந்தியாவில் சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக தெரியவருகிறது. இரத்தக்களரிப் போருக்குப் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து 1799 இல் தூக்கிலிட்டனர். இதன் பின்னர் ஆங்கிலேய இராணுவம் அவரது செல்வத்தை எல்லாம் பறிமுதல் செய்து அவரது கோட்டையை அழித்து விட்டது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை (Panchalankurichi Veerapandiya Kattabomman kottai):

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இந்திய கட்டிடக் கலையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மாவீரன் கட்டபொம்மனை கைது செய்த பின்னர் இரண்டு முறை கிழக்கிந்திய கம்பெனி இந்த கோட்டையை அழித்தது. கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை என்பவர், கட்டபொம்மனின் இறப்பிற்கு பின்னர் 1801 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி சிறையில் 16 மாதங்கள் தனது வாழ்க்கையை கழித்து முடித்துவிட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அவர் தனது மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி ஒரு புதிய கோட்டையைக் கட்டினார், அந்த கோட்டை எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சில நவீன யுக்திகளை கையாண்டு கட்டப்பட்டது. இதற்காக ஐந்து நாட்களில் 7,000 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு, புதிய நுட்பங்களுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது. பிப்ரவரி 8, 1801 இல் கிழக்கிந்திய கம்பெனியின் ஜெனரல் வெல்ஸ்டுராய் இந்த கோட்டையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார், அவர் இந்த கோட்டையை மற்றொரு ஜிப்ரால்டர் என்று அழைத்தார். இவர் பின்னர் வந்த நாட்களில் ஊமைத்துரையிடம் இருந்து கோட்டையைக் கைப்பற்றிய பின்னர், கிழக்கிந்திய கம்பெனி துணையோடு மிகவும் சிரமப்பட்டு அந்த கோட்டையை அழித்தார். இரண்டாவது முறையாக அந்த கோட்டை முழுவதும் தகர்க்கப்பட்டு, அதில் இருந்த செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன.

மாவீரன் கட்டபொம்மன் இந்த இடத்தை கோட்டை கட்டுவதற்காக தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இந்த பகுதியில் உள்ள காட்டில் முன்னர் கட்டபொம்மன் வேட்டையாடும் போது, ஏழு வேட்டை நாய்களை ஒரு முயல் துரத்தி செல்லும் காட்சியைப் பார்த்தார். இந்த அதிசயத்தைக் கண்டு கட்டபொம்மன் ஆச்சரியப்பட்டார். எனவே மக்களுக்கு தைரியத்தைத் தரக்கூடிய பெரும் சக்திகள் அந்த நிலத்தில் உள்ளன என்று நம்பிய அவர், அங்கு தனது கோட்டையைக் கட்டி, அதற்கு பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது.

கட்டபொம்மன் ஒரு அச்சமற்ற தலைவராக விளங்கினார், அவர் ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளுக்கு தலை வணங்க மறுத்து, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு பெரும் சவாலாக விளங்கினார். 1798 மற்றும் 1801 க்கு இடையில், தனது தாய்நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்த ஒரு துணிச்சலான போர்வீரன் என்று சிறப்பிக்கப்படும் மாவீரன் கட்டபொம்மன், 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப் போருக்குப் பின்னால் உத்வேகம் அளித்ததாக பாஞ்சாலங்குறிச்சியில் அவர் ஆரம்பித்த போராட்டம் பாராட்டப்பட்டது, இதை ஆங்கிலேயர்கள் “சிப்பாய் கலகம்” என்று அழைத்தனர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிரான போர் (Panchalankurichi Veerapandiya Kattabomman kottai varalaru):

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பெரும் தொகையை கடன் வாங்கிய ஆர்காட்டின் நவாப், அவர் கடன் வாங்கிய பணத்திற்கு பதிலாக தென் பிராந்தியத்திலிருந்து வரிகளை வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரின் அந்த நிறுவனத்திற்கு வழங்கினார். கிழக்கிந்திய கம்பெனி இந்த நிலைமையைப் பயன்படுத்தி, வரி வசூல் என்ற பெயரில் மக்களின் அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்தது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தவிர அனைத்து ஆட்சியாளர்களும் வரி செலுத்தி வந்தனர். கட்டபொம்மன் மட்டும் எத்தனை முறை கேட்டும் தனது நிலுவைத் தொகையை செலுத்த மறுத்துவிட்டார், நீண்ட காலமாக கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டர் ஜாக்சனை சந்திக்கவும் மறுத்துவிட்டார். இறுதியாக, ராமநாதபுரத்தின் சேதுபதியின் அரண்மனையான ‘ராமலிங்க விலாசம்’ என்ற இடத்தில் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஜாக்சன் துறையை வீரபாண்டிய கட்டபொம்மன் சந்திக்கிறார். அந்த சந்திப்பு கூட ஒரு மோதலில் முடிந்தது, அதில் நிறுவனத்தின் படைகளின் துணை கமாண்டன்ட் கிளார்க் கொல்லப்பட்டார். கட்டபொம்மனும் அவரது ஆட்களும் இந்திய சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கான வழியை தேடி ஆங்கிலேயர்களுக்கு எதிர்த்துப் போராடினார்கள், ஆனால் கட்டபொம்மனின் செயலாளரான தனாதிபதி பிள்ளை மட்டும் கைதியாக பிடித்துக் கொள்ளப்பட்டார். இந்த சம்பவத்திற்குள் சென்ற ஆங்கிலேய அரசின் விசாரணை ஆணையம், கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட்டு அவரை காட்டிக்கொடுப்போருக்கு இவ்வளவு பரிசு என கூறி கட்டபொம்மனின் தலைக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்தது. தனாதிபதி பிள்ளை மற்றும் 16 பேர் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் தனாதிபதி பிள்ளை தூக்கிலிடப்பட்டார் மற்றும் அவரது தலையை மூங்கில் கம்பத்தில் கட்டிவைத்து பாஞ்சாலங்குறிச்சியில் காட்சிப்படுத்தி அங்குள்ள மக்களுக்கு பயத்தை உண்டாக்கினார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் கோலார்பட்டியில் இருந்த ராஜகோபால நாயக்கரின் வீட்டில் தங்கியிருந்தார். அவர் அங்கிருப்பதை அறிந்து கொண்ட ஆங்கிலேய வீரர்கள் அங்கு வீட்டைச் சூழ்ந்து நிற்க, கட்டபொம்மனும் அவரது உதவியாளர்களும் அங்கிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள திருக்கலம்பூர் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். கோலார்பட்டியில் இருந்து தப்பிச் சென்றபின், கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் கால்நடையாக சிவகங்கை சென்றனர். கடைசியாக அவர் புதுக்கோட்டையில் உள்ள விஜய ரகுநாத தொண்டைமான் அரண்மனையை அடைந்தார். அவர் அங்கு இருப்பதை ரகுநாத தொண்டைமான் மூலமாக அறிந்து கொண்ட கிழக்கிந்திய கம்பெனி, அரண்மனைக்கு படை வீரர்களை அனுப்பி 1799 அக்டோபர் 1 ஆம் தேதி கட்டபொம்மன் தூங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்தது. அக்டோபர் 16, 1799 இல் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது (புதுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு). இறுதியில் சுருக்கமான விசாரணைக்கு பிறகு, அவருக்கு ஆங்கிலேய அரசு தூக்கு தண்டனை விதித்தது. கயத்தாறில் உள்ள ஒரு புளிய மரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமட்டமாக்க பட்டு இடிக்கப்பட்டது மற்றும் கட்டபொம்மனின் செல்வங்கள் அனைத்தும் ஆங்கிலய வீரர்களால் சூறையாடப்பட்டன.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

கட்டபொம்மனின் மனிதநேயம் (Panchalankurichi Veerapandiya Kattabomman Fort History):

பாஞ்சாலங்குறிச்சிக்கு கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான போரின் போது இருபுறமும் ஏராளமான வீரர்கள் இறந்தனர். கட்டபொம்மன் வென்ற முதல் போரின் போது இறந்த தங்கள் சொந்த வீரர்களின் உடல்களை கிழக்கிந்திய கம்பெனி எடுத்துச் செல்லவில்லை. அதனை கண்ட கட்டபொம்மன் இறந்து போன அந்த ஆங்கிலேய படை வீரர்களின் உடலிற்கும் அனைத்து அனைத்து சடங்குகளையும் செய்தார். பின்னர் அவர் ஆங்கிலேய வீரர்களுக்காக ஒரு கல்லறையை பாஞ்சாலங்குறிச்சிக்குள் உருவாக்கினார். இன்றும் அங்கு இந்த கல்லறைகளை காண முடியும். அந்த அளவுக்கு மனிநேயத்துடன் நடந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனை தான் ஆங்கிலேய அரசு ஈவு இரக்கம் இன்றி தூக்கில் போட்டது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பார்வை நேரம் (Panchalankurichi Fort Timings)
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்
2 மணி முதல் மாலை 6 மணி வரை
நுழைவு கட்டணம்
பெரியவர்களுக்கு ₹2
குழந்தைகளுக்கு ₹1

 

கட்டிடக்கலை (Panchalankurichi Veerapandiya Kattabomman Fort Architecture):

தற்போது பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை தமிழ்நாடு அரசாங்கத்தால் 1974 இல் கட்டப்பட்டது ஆகும். இது கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இங்கு பழைய கோட்டையின் எஞ்சிய பகுதிகள் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாவது தலைமுறை வாரிசின் ஸ்னாப் ஷாட்டையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம். அவரது பெயர் ஜெகவீர பாண்டிய சுப்பிரமண்ய கட்டபொம்ம துரை. இவரை ‘வீமராஜா’ என்றும் அழைக்கிறார்கள். இந்த கோட்டைக்கு அருகில் ஸ்ரீ தேவி ஜக்காமா கோயில் உள்ளது. கட்டபொம்மனின் பாரம்பரிய தெய்வமாக இந்த தெய்வம் கருதப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் அமைந்துள்ள கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், இந்த மாபெரும் போர் வீரனுக்கான மற்றொரு நினைவுச் சின்னம் இங்கு கட்டப்பட்டுள்ளது. 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பகுதி ஒரு மேடாகவே இருந்தது. இங்கு தகுந்த அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கட்டபொம்மனின் அரண்மனையின் எச்சங்களை கண்டுபிடிப்பதே இந்த அகழ்வாராய்ச்சியின் நோக்கம். அகழ்வாராய்ச்சியில் பிரதான அரண்மனை தெற்கு முனையில் கிழக்கு நோக்கிய நுழைவாயிலுடன் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் நுழைவாயிலைக் கொண்டுள்ளன. தானியங்களை சேமிப்பதற்காக சுண்ணாம்பு பூச்சுடன் வரிசையாக ஒன்றரை மீட்டர் சதுர குழி இருந்தது. வடக்கே ஒரு சாய்வு கொண்ட ஒரு பாதை பார்வையாளர்களின் மண்டபத்திற்கு செல்ல வழிவகுத்தது, இது கட்டமைப்பின் மிகவும் ஈர்க்கக்கூடிய பகுதியாகும். இது செங்கற்களால் கட்டப்பட்ட மேற்கு முனையில் ஒரு உயர்த்தப்பட்ட தளத்தைக் கொண்டிருந்தது. மேடையின் கிழக்கு பகுதி அலங்கார மோல்டிங் மற்றும் விளக்குகளுக்கான வரிசை சாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. பிரதான மேடையை ஒட்டிய வடக்கு சுவரில் ஒரு பீரங்கி பந்து காணப்பட்டது. பார்வையாளர்களின் மண்டபத்தை ஒட்டியுள்ள கல்யாண மண்டபம் மையத்தில் ஒரு சதுர மேடையும், சுற்றி ஒரு உயரமான தளமும் உள்ளது.
இத்தனை சிறப்புகளும், பெருமைகளும் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த அரண்மனையை பாஞ்சாலங்குறிச்சி சென்று பார்த்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். சிறு குழந்தைகளை இது போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று நம் முன்னோர்களின் வீர, தீர செயல்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 34 min (30.5km)
  • Tirunelvelli - 1 hr 3 min (46km)
  • Tirchendur - 1 hr22 min (64.7km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
  • Thoothukudi - 45 min (38.2km)
Written by லட்சுமி பிரியங்கா
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram