சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி என்று பெயர். இதன் பெருமைகள் பற்றிப் பவிஸ்யோத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏகாதசி விரதத்தை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது. வருத்தினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை கொடுக்கும் என்றும், அனைத்து பாவ வினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் அன்பர்கள் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல், மாமிசம் உண்ணுதல், தேன் உண்ணுதல், கீரை உண்ணுதல் ஆகியவற்றை நீக்க வேண்டும். மேலும் விரதம் மேற்கொள்ளும் நாளில் சூதாட்டம், பகல் உறக்கம், கோபம் கொள்ளுதல், பொய் சொல்லுதல், முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் ஆகிய செயல்களையும் செய்யக்கூடாது. இந்த விரதத்தை யாரொருவர் முறைப்படிக் கடைப்பிடித்து பரந்தாமனை வணங்கினாலும், அவர்கள் ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் வரும் பலனை பெறுவார்கள் என்றும், எல்லா பாவ வினைகளில் இருந்து விடுபட்டு வைகுண்டம் சேர்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பல அற்புத பலன்களை தரும் இந்த வருத்தினி ஏகாதசி விரதத்தை இன்று நாம் கடைபிடித்து பரந்தாமனை வணங்குவோமாக....!