அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில்
தமிழ் முனிவர் அகத்தியரை மூலவராக கொண்ட தனி திருக்கோவிலாக திகழ்கிறது அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில்.
சுவாமி பெயர்: அகத்தீஸ்வரர்.
அம்மை பெயர்: லோபா முத்ரை அம்மை.
தீர்த்தம்: தாமிரபரணி.
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் கைலாயத்தில் நடைபெறும் அம்மை அப்பர் திருமணத்தினை காண முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வட திசை தாழ்ந்து தென் திசை உயர்கிறது. பூமியை சம நிலைப் படுத்த சிவபெருமான் தமிழ் முனிவர் அகத்தியரை தென் திசை நோக்கி செல்லும் படி கட்டளையிடுகிறார். தான் தென் திசை நோக்கி சென்றால் அம்மை அப்பர் திருக்கல்யாணத்தை காண முடியாதே என மனதுக்குள் வருந்திய அகத்தியருக்கு சிவபெருமான் தான் பொதிகை மலை அடிவாரத்தில் திருமணக் காட்சி அளிப்பதாக கூறிட, சிவபெருமானின் கட்டளையை ஏற்று தென் திசைக்கு வருகிறார். அப்படி அவர் தென் திசை நோக்கி வந்த போது செல்லும் வழியில், பல இடங்களில் சிவ பூஜை செய்தார். அப்போது பொதிகை மலைச் சாரலில் உள்ள அம்பாசமுத்திரத்திற்கு வந்து தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமர்ந்து சிவ பூஜை செய்தார்.
அந்த வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவருக்கு அருளாசி வழங்கிய அகத்தியர் தனக்கு பசியாக இருப்பதால் அமுது படைக்கும் படி கேட்கிறார். அதனை தன் பாக்கியமாக கருதிய அந்த சிவபக்தர், அகத்தியர் பெருமானை தன் இருப்பிடத்திற்கு அழைக்க., அகத்தியரோ தான் அங்கிருந்த புளிய மரத்தின் அடியில் காத்திருப்பதாகச் சொல்லி அமர்ந்தார்.
உடனே சிவபக்தர் தன் இருப்பிடத்திற்கு சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வர, அதற்குள் தாமதமாகி விடவே, அகத்தியர் பெருமான் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விடுகிறார். உணவுடன் அங்கு வந்து சேர்ந்த சிவபக்தர், அகத்தியர் சென்றுவிட்டதை அறிந்து, தான் கொண்டு வந்த உணவை அகத்தியர் வந்து சாப்பிடாமல் தன் இருப்பிடம் திரும்ப மாட்டேன் என சபதம் பூண்டு அகத்தியரை நினைத்தபடி தவமிருந்தார்.
அந்த சிவபக்தரின் தூய பக்தியை மெச்சிய அகத்தியப் பெருமான் அவர் முன்னர் காட்சி கொடுத்து, அவர் கொண்டு வந்த உணவை விரும்பி சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டதே இந்த அகத்தீஸ்வரர் கோவில் ஆகும்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Falls of naathi anai - 15min
- ஆஞ்சநேயர் கோவில் படித்துறை - 7min(2.8km)
- Sankaralinga samy padithurai - 8min(2.8km)
- Agasthiyar Falls - 33min(12.5km)
சுவாமி அகத்தீஸ்வரர் :
கிழக்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில், வலது கையில் சின் முத்திரை காட்டியும், இடது கையில் ஏடு ஏந்தியும், கழுத்தில் லிங்க மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், முகத்தில் மீசை மற்றும் தாடியுடன்
காட்சியளிக்கிறார் அகத்தீஸ்வரர்.
அம்மை லோபா முத்ரை:
தெற்கு நோக்கிய சன்னதி கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், புன்முறுவல் பூத்த படி காட்சியளிக்கிறாள் அம்மை லோபா முத்ரை.
திருக்கோவில் அமைப்பு:
கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் இக்கோவில் நுழைவாயிலை தாண்டி உள்ளே சென்றால் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை அமையப் பெற்றுள்ளது. அவற்றைத் தாண்டி நேரே சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் அகத்தீஸ்வரரும், தெற்கு நோக்கிய கருவறையில் லோபா முத்ரை அம்மையும் காட்சித் தருகிறார்கள்.
திருக்கோவில் சுற்றுப் பிரகாரத்தில் அகத்தியரின் ஓவியம் மற்றும் சுதை சிற்பமும், அகத்தியர், லோபா முத்ரை அம்மையின் உற்சவ திருமேனிகளும் அமையப் பெற்றுள்ளன. இது தவிர பரிவார மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, கன்னி மூல கணபதி, சின்ன சங்கரன்கோவில் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சோமாஸ்கந்தர், கோமதி அம்மை, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், பிட்சாடனர் மற்றும் இத் திருக்கோவிலின் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சிவகாமி அம்மை உடனுறை நடராஜ பெருமான் ஆகியோரும் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.
திருக்கோவில் சிறப்புக்கள்:
அகத்தியருக்கென்று அமையப்பெற்ற தனித் திருக்கோவிலாக இக் கோவில் சிறப்புற விளங்குகிறது.
இங்கு உள்ள உற்சவர் அகத்தியர் வலது கையின் நடு விரல்கள் இரண்டையும் மடக்கியபடி, பக்தர்களை வா என்று அழைக்கும் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு ஆகும்.
இங்கு சிவன் கோவிலைப் போலவே பரிவார மூர்த்திகளை கொண்டு, எதிரில் நந்தி இருக்க கருவறையில் அகத்தியர் சிவ சொரூபமாக காட்சியளிக்கிறார்.
இங்குள்ள அகத்திய பெருமானுக்கு சிவனுக்கு நடைபெறுவதை போன்றே அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது. குறிப்பாக சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் அகத்திய பெருமானுக்கு நடைபெறுவதும் சிறப்பம்சம்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் அன்னம் படைத்தல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அன்று இப்பகுதி பக்தர்கள், தங்கள் வீடுகளில் இருந்து சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் என தயார் செய்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் குவித்து வைத்து நடைகளை அடைத்து விடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்க்கும் போது அந்த உணவுக் குவியலில் காலடித் தடம் பதிந்து காணப்படும். பக்தர்கள் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொண்டதால் அவரின் காலடி தடம் பதிந்துள்ளதாக ஜதீகம். பின்னர் அந்த உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், கும்பிடு நமஸ்காரம் மற்றும் அங்க பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
முக்கிய திருவிழாக்கள் :
இங்கு பங்குனி மாதம் பத்து நாட்கள் பெருந் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் எட்டாம் நாள் அன்று இக் கோவிலில் இருந்து அகத்தியப் பெருமான், லோபா முத்ரை அம்மையுடன் பச்சை சாத்தி அலங்காரம் பூண்டு, அம்மையப்பர் கோவில் அருகே எழுந்தருள்வார்கள். அப்போது அங்கு சிவகாமி அம்மையுடன் நடராஜ பெருமான் எழுந்தருளி காட்சியளிப்பார் என்பது சிறப்பம்சம்.
தை மாதம் அகத்தியர் - லோபா முத்ரை அம்மை திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.
இது தவிர மாதாந்திர பிரதோஷம், பெளர்ணமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.
அமைவிடம் :
திருநெல்வேலி - பாபநாசம் சாலை வழியில், திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் இந்த கோவில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலியில் இருந்து விக்கிரமசிங்க புரம் மற்றும் பாபநாசம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இக் கோவில் வழியாகவே செல்லும்.